சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்- பட்ஜெட்டில் அறிவிப்பு

ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் இன்று ரூ.1.04 லட்சம் கோடியில் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் பூபேஷ் பாகல் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள மொத்த ஒதுக்கீட்டில் சமூகத் துறைக்கு 37 சதவீதமும், பொருளாதாரத் துறைக்கு 40 சதவீதமும், பொது சேவைத் துறைக்கு 23 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்வர் பூபேஷ் பாகல் பேசியதாவது:-
மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். சத்தீஸ்கர் தொழில்முறை தேர்வு வாரியம் மற்றம் சத்தீஸ்கர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் அனைத்து தொழில்முறை தேர்வுகளிலும், மாநிலத்தில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும்.
மக்கள் பிரதிநிதிகள் மூலம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக, எம்.எல்.ஏ.க்கள்,  மாவட்ட மற்றும் ஜன்பத் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்படும். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தப்படும், இதற்காக ரூ.364 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, மாவட்ட பஞ்சாயத்து, ஜன்பத் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து ஆகிய பஞ்சாயத்து அமைப்புகளின் பிரதிநிதிகளின் மதிப்பூதியம் மற்றும் அலவன்ஸ் உயர்த்தப்படும்.
பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் அளித்து சுயசார்பை அடையும் வகையில், அறிவிக்கப்பட்ட பகுதிகளில், கிராம பஞ்சாயத்துகள் மூலம் மணல் சுரங்கங்கள் செயல்படுத்தப்படும். சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்தின் அனுமதியின்றி ஊராட்சி பகுதிகளில் சுரங்கங்களை செயல்படுத்த முடியாது.
ஆட்கடத்தல் சம்பவங்களைத் தடுக்க மாநில அளவில் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்படும். லஞ்ச ஒழிப்பு மற்றும் குறைதீர்ப்பு பிரிவு அமைக்கப்படும். வருவாயை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளைப் பெற, மாநில நிதித் துறையின் கீழ் ‘கரவர்தன் செல்’ அமைக்கப்படும்.
மொத்த நிகரச் செலவு ரூ.1,04,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் செலவினம் 88,372 கோடியாகவும், மூலதனச் செலவு 15,241 கோடியாகவும் உள்ளது, இது மொத்த செலவில் 14.6 சதவீதம் ஆகும். மாநிலத்தின் மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.14,600 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாகும். 2022-23 ஆம் ஆண்டில் மொத்த வருவாய் உபரி ரூ.702 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23ம் நிதியாண்டுக்கு புதிய வரி திட்டம் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.