நேற்றே கணித்தது தமிழ் சமயம்.. வேட்பாளர்களை ரிசார்ட்டுகளில் அடைக்கும் காங்.. கோவா கலகல!

கோவா மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையலாம் என்பதால், வெற்றி பெற்ற வேட்பாளர்களை ரிசார்ட்டுகளில் பாதுகாக்கும் சூழல் வரும் வாய்ப்பிருப்பதாக நேற்றுதான் நாம் செய்தி எழுதினோம். இதோ
காங்கிரஸ்
இன்றே அந்த வேலையை ஆரம்பித்து விட்டது.

5 மாநில சட்டசபைத் தேர்தல்
தொடர்பான
எக்ஸிட் போல்
முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் உ.பி, உத்தரகாண்ட், மணிப்பூரில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் ஆம்
ஆத்மி
மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.

அங்கு திரினமூல் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் வாக்குகளைப் பிரித்துள்ளதால், காங்கிரஸ், பாஜக இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் தொங்கு சட்டசபைக்கு அங்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதையடுத்து கோவாவில் வெற்றி பெறும் எம்எல்ஏக்களை ரிசார்ட்டுகளில் தங்க வைத்துப் பாதுகாக்கும் நிலை வரும் என்று நேற்றுதான் தமிழ் சமயம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. இன்று அது நிஜமாகவே நடக்க ஆரம்பித்துள்ளது.

கோவா மாநிலசட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை ரிசார்ட்டுகளில் தங்க வைக்க ஆரம்பித்துள்ளனராம். இப்படித்தான் 2017ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. பாஜக இரண்டாம் இடத்தைத்தான் பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியை உடைத்து எம்எல்ஏக்களை ஆசை காட்டி இழுத்து கடைசியில் பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டது. காங்கிரஸ் ஏமாந்து போய் நின்றது.

இந்த நிலை மீண்டும் வந்து விடக் கூடாது என்பதால் இப்போதே வேட்பாளர்களையே கொண்டு போய் ரிசார்ட்டில் தங்க வைத்து வருகின்றனராம். வடக்கு கோவாவில் உள்ள ரிசார்ட்டில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனராம்.வியாழக்கிழமை கோவாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் முடிவுகள் தெரியும் வரை இவர்கள் ரிசார்ட்டில்தான் தங்கியிருப்பார்களாம்.

இதுகுறித்து கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இதுகுறித்துக் கூறுகையில், எங்களது எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க முடிவு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சிறிய கட்சிகளுடன் இப்போதே பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து கோவா மாநில தேர்தல் பொறுப்பாளர்களான ப.சிதம்பரம், டி.கே.சிவக்குமார் ஆகியோர் சிறிய கட்சிகளை அணுக ஆரம்பித்துள்ளனராம். சுயேச்சைகளுடனும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாம்.

மேலும் ஆம் ஆத்மி கட்சியையும் காங்கிரஸ் தொடர்பு கொண்டுள்ளதாம். டெல்லியில் 2013ம் ஆண்டு முதல் முறையாக கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தபோது அக்கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்தது காங்கிரஸ்தான் என்பது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து தினேஷ் குண்டுராவ் கூறுகையில், நாங்கள் எல்லோருடனும் பேசுவோம். பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவருடனும் பேசுவோம். திரினமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியோருடன் கூட்டணி வைக்கவும் நாங்கள் தயார். பாஜக இங்கு ஆட்சியில்தொடர மக்கள் விரும்பவில்லை என்றார்.

ஆம் ஆத்மி கட்சியும் கூட காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அமீத் பலேகர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி எங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. நாங்கள் பாஜக அல்லாத கூட்டணிக்குத் தயார்தான். பாஜகவை எந்த சூழ்நிலையிலும் நாங்கள் ஆதரிக்கமாட்டோம் என்றார்.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் – திரினமூல்காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசப்பட்டது. ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. இதையடுத்து இரு கட்சிகளும் சரமாரியாக விமர்சித்துக் கொண்டன. மேலும் பல காங்கிரஸ் பிரமுகர்களை திரினமூல் காங்கிரஸ் தன் பக்கம் இழுக்க ஆரம்பித்தது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் அதிகரித்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாற ஆரம்பித்துள்ளது.

இதையெல்லாம் பாஜக அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அது தன் பாணியில் தனிக் கணக்கு போட்டு எம்எல்ஏக்களை கொத்திக் கொண்டு போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.