பஞ்சாப் முதல்வராக வரும் 16ல் பதவியேற்கிறார் பகவந்த் மன்!

பஞ்சாப் மாநில முதலமைச்சராக வரும் 16 ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மன் பதவி ஏற்க உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதன்படி, சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்துள்ளது. வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் படு தோல்வி அடைந்துள்ளனர்.

இந்தத் தேர்தலில், டெல்லி முதலமைச்சர்
அரவிந்த் கெஜ்ரிவால்
தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 92 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி சாதனை படைத்துள்ளது. இந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மன் அபார வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரை, டெல்லியில், ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மன் இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது பதவி ஏற்பு தேதி குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், வரும் 16 ஆம் தேதி புதன் கிழமை, பஞ்சாப் மாநில முதலமைச்சராக, ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மன் பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் கிராமமான கட்கர் காலனில் தான் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பகவந்த் மன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே, வரும் 13 ஆம் தேதி அமிர்தசரசில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பகவந்த் மன் சாலைப் பேரணி நடத்த முடிவு செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.