ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் கேரள ஐஎஸ் தீவிரவாதி பலி: தமிழக கல்லூரியில் எம்.டெக் படித்தவர்

திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் 30க்கும் மேற்பட்டோர் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உட்பட நாடுகளுக்கு சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. இதில் பலர் அங்கு நடந்த பல்வேறு தாக்குதல்களில் உயிரிழந்தனர். இந்நிலையில் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நஜீப் (23) என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் சென்றார். இவர் கடந்த 2017ம் ஆண்டு வேலூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் எம்.டெக் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.இது தொடர்பாக நடத்திய விசாரணையில் இவர் ஐதராபாத்தில் இருந்து துபாய் சென்று பின்னர் அங்கிருந்து ஆப்கானிஸ்தானிலுள்ள கொராசான் பகுதிக்கு சென்றது தெரியவந்தது. அதற்கு முன்னதாக இவர் ஈராக், சிரியா ஆகிய நாடுகளுக்கும் சென்றிருந்தார். இந்நிலையில் நஜீப், கொராசான் பகுதியில் நடந்த ஒரு தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வாய்ஸ் ஆப் கொராசான் என்ற ஐஎஸ் இயக்கத்தின் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.ஆப்கானிஸ்தான் சென்ற நஜீப் அங்கு வைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமண நாளில் அப்பகுதியில் ஐஎஸ் இயக்கத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் இந்த தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில் நஜீப் தலைமையில் சிலர் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நஜீப் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.