தாயின் சடலத்துடன் 4 நாட்களாக வசித்த சிறுவன்: திருப்பதியில் சோகம்!

திருப்பதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தவர் ராஜலட்சுமி (41). இவர் தனது மகனுடன்
திருப்பதி
வித்யாநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். ராஜலட்சுமியின் மகன் ஷியாம்கிஷோர் (10), திருப்பதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் ராஜலட்சுமி அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு உறங்க சென்றவர், அப்படியே உயிரிழந்து விட்டதாக தெரிகிறது.

ஆனால், தனது தாய் உயிரிழந்தது சிறுவன் ஷியாம்கிஷோருக்கு தெரியவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவர் உறங்குவதாக நினைத்த சிறுவன், அவரை எழுப்ப மனமில்லாமல், தாயின் சடலத்துடனேயே 4 நாட்கள் வசித்து வந்துள்ளான். இடைப்பட்ட நாட்களில் வீட்டில் இருந்த உணவை சாப்பிட்டு, பள்ளிக்கும் சென்று வந்துள்ளான் சிறுவன் ஷியாம்கிஷோர்.

இந்த நிலையில், சிறுவனின் மாமா துர்காபிரசாத் எதேச்சையான அவனுக்கு போன் செய்துள்ளார். அப்போது, தாயார் துங்குவதாகவும், நாட்களாக எழவில்லை எனவும் சிறுவன் தெரிவித்துள்ளான். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். வீட்டில் துர்நாற்றம் வீசவே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ராஜலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் உயிரிழந்தது தெரியாமல் உறங்குவதாக நினைத்து அவருடன் நான்கு நாட்கள் சிறுவன் வசித்து வந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.