நடிகரானார் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் – சினிமாவிலும் போலீஸாக களமிறக்கம்

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ஜாங்கிட் தமிழ் சினிமாவில் படம் ஒன்றில் நடிகராக, போலீஸ் வேடத்திலேயே நடித்துள்ளார்.

தமிழக முன்னாள் டிஜிபி ஆன எஸ்.ஆர்.ஜாங்கிட் குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனாக திகழ்ந்தார். பல முக்கிய வழக்குகளில் இவரது பணி சிறப்பாக இருந்தது. குறிப்பாக பவாரியா கொள்ளை சம்பவ வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனையும் பெற்று தந்தார். இதனால் இவர் இந்திய அளவில் பிரபலமானார். இந்த சம்பவம் தான் சில ஆண்டுகளுக்கு முன் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படமாக வெளிவந்தது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி உள்ளார். ‛குட்டிப்புலி' புகழ் ஷரவணஷக்தி இயக்கத்தில் விமல், தன்யா ஹோப் நடிப்பில் உருவாகி வரும் ‛குலசாமி' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து, தான் நடிப்பதையும் பதிவிட்டுள்ளார் ஜாங்கிட். இந்த படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதி உள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. விரைவில் படம் வெளியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.