உக்ரைன் தலைநகரில் ரஷ்ய படையினர் தாக்குதல் குடியிருப்பு கட்டடங்களை தகர்த்ததால் அதிர்ச்சி| Dinamalar

லீவ் : ரஷ்யா – உக்ரைன் இடையில் போர் நடந்து வரும் நிலையில் இதற்கு தீர்வு காண இருநாட்டு உயர் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை ரஷ்ய படையினர் ஏவுகணைகளை வீசி தகர்த்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய விரும்பியது. அதில் உக்ரைன் இணைந்தால் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் எல்லையில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை நிறுத்தினார்.புடின் உத்தரவின்படி பிப். 24ம் தேதி உக்ரைனுக்குள் ரஷ்ய படையினர் நுழைந்தனர். அன்று முதல் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களை அனுப்பி வைத்து வருகின்றன. இது ரஷ்யாவை மேலும் ஆத்திரமடைய வைத்துள்ளது.இதனால் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் தாக்குதல்களை ரஷ்ய படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். கீவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்கள் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டு கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

மறுபுறம் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சண்டையில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்களும் அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.உக்ரைனின் கிழக்கு எல்லையில் இருந்து தாக்குதலை துவங்கிய ரஷ்ய படையினர் தற்போது நாட்டின் மேற்கு பகுதிகள் வரை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளனர். இது உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

உக்ரைன் – போலந்து எல்லைப் பகுதியில் இருந்த ராணுவ தளத்தில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று முன்தினம் 35 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. போரில் நேட்டோ நாடுகள் இணைய அது வழிவகுக்கும் என கருதப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரஷ்யாவை எச்சரித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் கூறியதாவது:உக்ரைன் நாட்டை விட்டு அதன் அண்டை நாடுகளில் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தினால் அதற்கு நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். நேட்டோ நாடுகள் மீது தெரியாமல் ஏவுகணை வீசப்பட்டாலும் அதற்கு ரஷ்யா கடும் விளைவை சந்திக்க நேரிடும்; நேட்டோ நாடுகள் களமிறங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:உக்ரைன் நாட்டின் வான்பரப்பை ‘நோ பிளை ஜோன்’ எனப்படும் பறக்க முடியாத மண்டலமாக நேட்டோ தலைவர்கள் அறிவிக்க வேண்டும். உக்ரைன் வான்வழியை மூடாவிட்டால் அது பெரும் சேதங்களை ஏற்படுத்தக்கூடும்.நேட்டோ நாடுகளிலும் ரஷ்ய படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தக்கூடும். எனவே விரைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

உக்ரைன் அதிபரின் இந்த அறிக்கையால் நேட்டோ நாடுகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பிரச்னைக்கு சுமுக தீர்வு காண உக்ரைன் – ரஷ்ய பிரதிநிதிகள் இடையே நான்காம் சுற்று பேச்சு ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று துவங்கியது.

கர்ப்பிணி, குழந்தை பலி

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனை மீது குண்டுகளை வீசி ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அங்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி ஒருவர் படுகாயமடைந்தார். பின் அவருக்கு ஆப்பரேஷன் செய்து குழந்தை எடுக்கப்பட்டது. எனினும் அந்த குழந்தையிடம் எந்த அசைவும் தெரியவில்லை. இதைப்பார்த்த அந்த பெண் தன்னையும் கொன்றுவிடும்படி டாக்டர்களிடம் கதறி அழுது புலம்பினார். இதைக்கண்டு டாக்டர்கள் வேதனை அடைந்தனர். பின் அந்த பெண் மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். எனினும் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சீனாவிடம் உதவி கேட்ட ரஷ்யா

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா சீனாவிடம் உதவி கேட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாவது:உக்ரைனை ஆக்கிரமிக்கும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ரஷ்யா ராணுவ உபகரணங்களை வழங்கக்கோரி சீனாவிடம் உதவி கோரி உள்ளது. இதை சீனா செய்தால் அது பெரிய அளவிலான பாதிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும். ரஷ்யாவுக்கு சீனா உதவக்கூடாது. அதை அமெரிக்கா என்றும் அனுமதிக்காது.இவ்வாறு அவர் கூறினார். இந்த தகவலை சீனா மறுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.