ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.4 ஆக பதிவு: 4 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம்

டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு மாகாணங்களில் நேற்று 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் கடலில் 3 மீட்டர் உயரத்துக்கு பேரலைகள் எழும்பியதாகத் தெரிகிறது.

இந்த நிலநடுக்கம் குறித்து பேசிய அரசு செய்தித் தொடர்பாளர் ஹிரோகாசு மட்சுனோ, சேத விவரங்களை ஆராய்ந்து வருவதாகக் கூறினார். புகுஷிமா அணு உலை, டைச்சி, டைனி அணுமின் நிலையங்கள், ஒனகாவா அணுமின் நிலையம் ஆகியனவற்றில் இருந்து எவ்வித எச்சரிக்கைத் தகவலும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நிலநடுக்கத்தின் காரணமாக புகுஷிமா நகரின் வடக்கே செண்டாய் பகுதியில் புல்லட் ரயில் ஒன்று தடம் புரண்டது. குடியிருப்புகள் பல சேதமடைந்துள்ளன. பொது இடங்கள், வணிக வளாகங்கள் என கட்டுமான சேதம் பெருமளவில் உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 லட்சம் மக்கள் மின் இணைப்பு இல்லாமல் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஜப்பான் பசிபிக் ரிங் ஆஃப் ஃபையர் எனப்படும் நிலநடுக்கம் ஆபத்துள்ள பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அவ்வப்போது நில அதிர்வு ஏற்படுவது இயல்பாகவே இருக்கிறது. இருப்பினும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18,500 பேர் உயிரிழந்தனர். மேலும் அப்போது ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து கதிர்வீச்சு ஏற்பட்டது. அது இப்போதும் அங்கு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்றைய நிலநடுக்கத்தால் டயோட்டோ மோட்டார் கார்ப் போன்ற சிப்மேக்கர் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே உலகளவில் சிப் விநியோக பிரச்சினைகளால் ஸ்மார்ட்ஃபோன், எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல் துறைகள் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள டயோட்டோ மோட்டார் கார்ப் உற்பத்தியை தொடங்கி இயல்புக்கு திரும்ப காலம் ஆகும் என்பதால் இத்துறைகளில் மேலும் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.