காங்கிரஸ் உடையாது.. ஆனால் சோனியா இதைச் செய்யணும்.. அதிருப்தியாளர்கள் போர்க்கொடி!

காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள
சோனியா காந்தி
குடும்ப விசுவாசிகளை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் அதிருப்தித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை சோனியா காந்தியை நேரில் சந்தித்து தெரிவிக்கவும் தீர்மானித்துள்ளனர்.

ஒவ்வொரு தேர்தல் முடிவுக்குப் பிறகும்
காங்கிரஸ் அதிருப்தியாளர்கள்
, சோனியா குடும்பத்தினருக்கு எதிராக கூடிப் பேசுவதும், தீர்மானம் போடுவதும், பொது வெளியில் விமர்சிப்பதும் வழக்கமாக உள்ளது. ஆனால் பின்னர் அப்படியே இது நீர்த்துப் போய் விடும். அடுத்த தேர்தலில் தோற்கும் வரை இந்த அதிருப்தியாளர்கள் அமைதியாக இருப்பார்கள்.

கட்சியை பலப்படுத்த தலைமையுடன் இணைந்து செயல்படுவதை இந்த அதிருப்தி தலைவர்கள் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்கள். ஆக்கப்பூர்வமாக இவர்கள் யாருமே செயல்படுவதாக தெரியவில்லை. குற்றம் சாட்டுவது, அதைச் செய்யுங்க, இதைச் செய்யுங்க என்று தலைமைக்கு அட்வைஸ் செய்வதைத் தவிர அடிமட்ட அளவில் இறங்கிச் சென்று தொண்டர்களைத் தட்டிக் கொடுப்பது உள்ளிட்ட எந்த வேலைகளையும் இவர்கள் செய்வதில்லை.

இப்போது ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில் மீண்டும் இவர்கள் “பேச” ஆரம்பித்துள்ளனர். 23 தலைவர்கள் உள்ளடங்கிய இந்தக் குழுவினர் நேற்று நேரில் கூடி ஆலோசித்துள்ளனர். இதில் சில முக்கிய முடிவுகளையும் இவர்கள் எடுத்துள்ளனராம். இந்த முடிவுகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து மூத்த தலைவரும், அதிருப்தியாளர்கள் குழுவின் தலைவர் போல செயல்படுபவருமான
குலாம் நபி ஆசாத்
தெரிவிக்கவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட சில அம்சங்கள் குறித்துக் கூறப்படுவதாவது:

காங்கிரஸ் கட்சியை இப்போதைக்கு பிளவுபடுத்தக் கூடாது. பிளவுபட அனுமதிக்கவும் கூடாது. காரணம், காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக இருக்கிறது. இப்போது பிளவுபட்டால் அது கட்சியின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும்.

அதேசமயம், கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள சோனியா காந்தி குடும்ப விசுவாசிகளை உடனடியாக நீக்க வேண்டும். இதைக் கட்சித் தலைமையை நேரில் சந்தித்து தெரிவிக்க வேண்டும். மாநிலத் தலைவர்களை குற்றம் சாட்டும் கட்சித் தலைமை, தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்த காந்தி குடும்ப விசுவாசிகள் மீது கோபத்தைக் காட்டாதது தவறு.

காங்கிரஸ் தோல்விக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவில், அந்தத் தோல்விக்குக் காரணமானவர்கள்தான் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். பிறகு எப்படி விசாரணை நியாயமானதாக இருக்க முடியும் என்று அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

குலாம் நபி ஆசாத் வீட்டில் வைத்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இருப்பினும் இக்கூட்டத்தில் சோனியா காந்தி தலைமையை மாற்றும் கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்படவில்லை. நிர்வாக ரீதியில் மிகப் பெரிய மாற்றம் குறித்தும் இவர்கள் விவாதிக்கவில்லை. அதேசமயம், 2014 லோக்சபா தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்குத் தேவையான வலுவான கூட்டணியை காங்கிரஸ் அமைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று இந்தத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கூட்டத்தில் கபில் சிபல், மனீஷ் திவாரி, அனந்த் சர்மா, பிருத்விராஜ் சவான், சசி தரூர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் சசி தரூர் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பகிரங்கமாக பாராட்டியிருந்தார். முன்பே இவர் சோனியா காந்திக்கு பகிரங்கமாக ஒரு விமர்சனக் கடிதம் எழுதியவரும் கூட. இதுபோன்ற கூட்டத்தில் இதுவரை கலந்து கொள்ளாமல் இருந்து வந்த பூபிந்தர் சிங் ஹூடா, ராஜ் பாபர், சங்கர் சிங் வகேலா, மணிசங்கர் அய்யர் ஆகியோரும் கூட கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அய்யர் எல்லாம் காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசிகளில் ஒருவராக திகழ்ந்தவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.