ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலமாக இதுவரை 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் வழங்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தொகை ஆகியவை 2022ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் மூலமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,544.50 கோடி கூடுதல் செலவாகும்.  அரசின் இந்த நடவடிக்கை மூலமாக 47.68 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என 1.16 கோடி ஊழியர்கள்  பயன்பெறுவார்கள். இதேபோல் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சந்தை மற்றும் கடன் அணுகலை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில், உலக வங்கியின் உதவியுடன் ரூ,6062.45 கோடி நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.