புதுடெல்லி: மகாராஷ்டிராவின் புனேவில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின்சார ஸ்கூட்டர் கடந்த சனியன்று தீப்பிடித்து எரிந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வதைத் தொடர்ந்து தற்போது மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தநிலையில், பல இடங்களில் மின்சார ஸ்கூட்டர் எரியும் சம்பவங்கள் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகமானது, தீ விபத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், தீப்பற்றுவதற்கு காரணமான சூழ்நிலை குறித்த ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்ளும்படியும் வலியுறுத்தியுள்ளது.