இலங்கையில் கடந்த சில வாரமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசியப் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், மக்கள் தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.
மக்களின் கடும் கொந்தளிப்பால் ஊரடங்கும் போடப்பட்டு ராணுவம் தீவிர ரோந்து பணியில் உள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நடந்த இலங்கையின் அமைச்சரவை அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து விவாதித்த பின்னர், அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரின் சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சேவை தவிர ஒட்டுமொத்தமாக 26 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு செய்யப்பட்டது.
எனவே, 26 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை கோத்தபய ராஜபக்சேவிடம் அளித்தனர். கோத்தபய ராஜபக்சே ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு, புதிய அமைச்சரவை அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசை அமைக்க அனைத்துக் கட்சி அமைச்சரவைக்கு இலங்கை தயாராகி வருகிறது.