புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்த தர ₹50 கோடி பேரம் பேசிய வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்க துறை மீண்டும் கைது செய்துள்ளது. கடந்த 2016ல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. கட்சி சின்னத்தை மீட்க பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி. தினகரன் தரப்பிடம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், அவர் கூட்டாளிகள் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கு மட்டுமல்லாமல் சுகேஷ் சந்திரசேகர் மீது பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, கடந்த ஆண்டு டெல்லியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி ₹215 கோடி பணம் பறிக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கதுறை கைது செய்தது. அதே போல் பிரபல பாலிவுட் நடிககைள் ஜாக்குலின் பெர்னாண்டஸ்,நோரா பதேஹி ஆகியோருக்கு பல கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களை வாங்கி கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை இதே வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பின் அமலாக்க துறை நேற்று மீண்டும் கைது செய்துள்ளது.
