வங்கதேசத்தில் பொட்டு வைத்ததற்காக பெண் விரிவுரையாளர் மீது தாக்குதல் – காவலர் கைது

வங்கதேசத்தில் பொட்டு வைத்ததற்காக இந்து மதத்தைச் சேர்ந்த பெண் விரிவுரையாளர் மீது தாக்குதல் நடத்திய காவலர், மக்களின் தொடர் போராட்டம் காரணமாக இன்று கைது செய்யப்பட்டார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தேஜ்கோன் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருபவர் லோதா சுமந்தீர். இந்து மதத்தைச் சேர்ந்தவரான இவர் எப்போதும் கல்லூரிக்கு நெற்றியில் பொட்டு அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
image
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, கல்லூரி முடிந்து வெளியே வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த காவலர் நஸ்முல் தரீக், லோதாவை பார்த்து பொட்டை எடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு லோதா மறுத்ததால் அவரை மோசமான வார்த்தைகளால் காவலர் திட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லோதாவை தனது மோட்டார் சைக்கிளால் நஸ்முல் மோதுவது போல வந்திருக்கிறார். இதனால் லோதா நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த லோதா, இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். இது வங்கதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
image
சம்பந்தப்பட்ட காவலரை கைது செய்ய வலியுறுத்தி ஏராளமான இந்து மதத்தினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, காவலர் நஸ்முல் தரீக் இன்று கைது செய்யப்பட்டார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு துர்கா பூஜையின் போது இந்து மக்கள் மீது ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதலை நடத்தியதில் 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.