அனுமன் ஜெயந்தி விழா கலவரம் – அறிக்கை தாக்கல் செய்தது டெல்லி காவல்துறை

அனுமன் ஜெயந்தி விழாவில் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக முதல்கட்ட அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் டெல்லி காவல்துறை சமர்ப்பித்துள்ளது.
டெல்லியின் ஜஹாங்கிர்பூர் பகுதியில் கடந்த 16-ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக நடந்த ஊர்வலத்தின்போது இரு தரப்பைச் சேர்ந்த மக்களிடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் காவல்துறையினர் 8 பேர் உட்பட ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தனர்.
image
இந்த விவகாரம் தொடர்பாக எந்த பாரபட்சமும் இன்றி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா திட்டவட்டமாக கூறியிருந்தார். மேலும், டெல்லி கிரிமினல் பிரிவு சார்பாக 14 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கலவரம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் முதல்கட்ட அறிக்கையை தயாரித்துள்ள டெல்லி காவல்துறை அதனை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இன்று சமர்ப்பித்துள்ளது.
image
இதனிடையே, இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் நடந்து முடிந்து மூன்று தினங்கள் ஆனபோதிலும் ஜஹாங்கிர்பூர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் காவல் துறையினர் அங்கு அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை மேலும் தீவிரமாக கண்காணிப்பதற்காக ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கண்காணிப்பு பணிகளையும் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
– நிரஞ்சன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.