குருவாயூர் விரைவு ரயிலில் பயணம் செய்த ஒருவர் குடிபோதையில் அங்கிருந்த சக பயணிகளை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இந்த சம்பவத்தை ரயிலில் பயணம் செய்த வசந்த் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெற்கு ரயில்வே மற்றும் தமிழகக் காவல்துறைக்குப் புகைப்படங்களுடன் புகாராகத் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே காவல்துறைக்குத் தமிழகக் காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனையடுத்து, குருவாயூர் விரைவு ரயிலில் எஸ்-10 பெட்டியில் சோதனை செய்த எழும்பூர் ரயில்வே காவல் துறையினர் ரகளையில் ஈடுபட்ட அந்த நபரைக் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கைதுசெய்யப்பட்ட நபர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான விபின் என்பதும். அவர் சிஆர்பிஎஃப் வீரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. விடுமுறைக்கு ஊருக்குச் சென்றவர் மீண்டும் பணியில் சேர சென்னைக்கு வரும்போது மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
ட்விட்டர் புகாரின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ரயில் பணயத்தின் போது ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக 9962500500 என்ற ரயில்வே காவல் துறையின் எண்ணை தொடர்புகொண்டு எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம் என்று ரயில்வே டி.ஐ.ஜி அபிஷேக் தீக்சித் தெரிவித்துள்ளார்.