புதுடில்லி : ”இந்தோ – பசிபிக் பிராந்தியத்திலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் முழு அமைதி நிலவ, இந்தியாவும், அமெரிக்காவும் விரும்புகின்றன,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
டில்லியில் உள்ள அமெரிக்க வர்த்தக சங்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பிரதமர் மோடி -அமெரிக்க அதிபர் ஜோபைடன் இடையேயானபேச்சு, இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இடையே நடந்த பேச்சு ஆகியவற்றால், இரு நாடுகளுக்கு இடையே, ராணுவம், வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் உறவு வலுப்பட்டுள்ளது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்திலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், முழு அமைதி நிலவ, இரு நாடுகளும் விரும்புகின்றன.
இப்பிராந்தியத்தை மற்ற நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாக்கவும், இரு நாடுகளும் ஒருமித்த கருத்து கொண்டு உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே ராணுவ உறவு மேம்பட்டுள்ளது.அதேபோல், இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம், பொருளாதார உறவுகளும் வலுவடைந்துள்ளன. 21ம் நுாற்றாண்டில், இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு, சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
Advertisement