காஷ்மீரில் லஷ்கர் கமாண்டர் உட்பட 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நேற்று நடைபெற்ற மோதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர் கமாண்டர் உட்பட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், மால்வா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து காஷ்மீர் மண்டல போலீஸ் ஐ.ஜி. விஜய்குமார் கூறும்போது, “மால்வா என்கவுன்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர் கமாண்டரான யூசூப் கான்ட்ரூ உட்பட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி மக்கள் படுகொலை சம்பவங்களில் கான்ட்ரூவுக்கு தொடர்பு உள்ளது. சமீபத்தில் பட்காம் மாவட்டத்தில் ராணுவ வீரர், சிறப்பு போலீஸ் காவலர், அவரது சகோதரர் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். இதிலும் கான்ட்ரூவுக்கு தொடர்புள்ளது. கான்ட்ரூ கொல்லப்பட்டிருப்பது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும். மோதலின் தொடக்கத்தில் 3 வீரர்கள் லேசான காயம் அடைந்தனர். சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.