கோடநாடு விவகாரம் || சசிகலா பரபரப்பு அறிக்கை.!

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “”கோடநாட்டில் உள்ள எங்களது எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்றும் இன்றும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல் துறையை சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்திருக்கிறேன். முழுமையான அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறேன்.

கோடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம், ஆனால், என்னைப் பொறுத்தவரை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகவும் நேசித்த இடம், அவருக்கு நிறைய மன அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்த ஓர் இடம் உண்டு என்றால் அது கோடநாடுதான்.

எங்களைப் பொறுத்தவரையில் கோடநாடு பங்களாவை ஒரு கோயிலாகத்தான் பார்த்தோம். எங்கள் கட்சிக்காரர்களும் அப்படித்தான் பார்த்தார்கள். இது போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த எங்களது இடத்தில், விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்ற சமயத்தில் நானும் சிறையில் இருந்தேன். இந்தச் சம்பவத்தில் எங்களிடம் நெடுங்காலமாக பணியாற்றிய காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளையும் நடந்துள்ளது.

அதோடுமட்டுமல்ல, இந்தச் சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக சந்தேகத்திற்குரிய வகையில் தொடர்ச்சியாக மரணம் அடைந்துள்ளனர். இதில் எந்த பாவமும் அறியாத சின்ன குழந்தையும் அவரது தாயும் பலியாகி உள்ளனர். எனவே, காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இந்த சம்பவத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த, ஒன்றுமே அறியாத அப்பாவிகளான எங்களது காவலாளி ஓம் பகதூர், பிஞ்சு மனம் மாறாத சின்ன குழந்தை மற்றும் அவரது தாயார் ஆகியோருடைய மரணத்திற்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்” 

இவ்வாறு அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.