காஞ்சிபுரத்தில் பாலியல் தொழிலாளியுடன் சேர்ந்து முன்னாள் மனைவியைக் கொலை செய்த கணவன், அவரது உடலை சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச் சென்று, புதரில் வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில் கடந்த வாரம் இளம்பெண் ஒருவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரியா என்ற அந்தப் பெண் 3 ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நவீன் என்பவனை திருமணம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், ஜோதி என்ற பாலியல் தொழிலாளியிடம் பிரியா சிக்கியுள்ளார். கல்பனா என்ற பாலியல் தொழிலாளியுடன் நவீனுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கல்பனா கஞ்சா வியாபாரமும் செய்து வந்த நிலையில், அதுகுறித்து பிரியா போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் கல்பனா சிறைக்குச் செல்ல நேரிட்டுள்ளது. ஜாமீனில் வெளியே வந்ததும் நவீனும் கல்பனாவும் சேர்ந்து பிரியாவுக்கு மது வாங்கிக் கொடுத்து, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவரது உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து, சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் எடுத்துச் சென்று வல்லம் பகுதியில் புதரில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கல்பனாவையும் நவீனையும் போலீசார் கைது செய்தனர்.