“மாநில அரசால் விலை அதிகமாகிவிட்டது என்பது உண்மையல்ல” – பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே பதில்

பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருள் மீதான வரி குறைக்கப்பட்டு இருப்பதையும் மோடி சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநில அரசுகள் மீது குறை சொல்லும் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

“நாட்டில் வசூலாகும் மொத்த நேரடி வரியில் 38.3 சதவீதம் மகாராஷ்டிராவில் வசூலாகிறது. நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூலில் 15 சதவீதம் மகாராஷ்டிராவிலிருந்து கிடைக்கிறது. நேரடி வரி வசூல், ஜிஎஸ்டி வரி இரண்டிலும் மகாராஷ்டிராதான் முதலிடத்தில் இருக்கிறது. அப்படி இருந்தும் மத்திய அரசு மகாராஷ்டிரா அரசுக்கு 26,500 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி பாக்கி வைத்திருக்கிறது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.

முதல்வர்கள் கூட்டத்தில் மோடி

மகாராஷ்டிரா அரசு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை தானே சமாளித்து வருகிறது. மகாராஷ்டிரா அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காது. எரிபொருள் விலை உயர்வுக்கு மாநில அரசை குறை சொல்ல முடியாது. இன்று மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலையில் மத்திய அரசுக்கு ரூ.24.38, மாநிலத்துக்கு ரூ.22.37. பெட்ரோல் விலையில், ரூ.31.58 மத்திய வரியாகவும், ரூ.32.55 மாநில வரியாகவும் உள்ளது. எனவே, மாநில அரசால் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகிவிட்டது என்பது உண்மையல்ல.

அதேசமயம் எரிவாயு மீதான வரியை குறைத்திருக்கிறோம். மக்கள் பைப் கேஸ் பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படுவர். எரிவாயு பயன்பாட்டு வாகனங்கள் ஊக்கப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அரசு ஏற்கனவே கடுமையான நிதிச்சுமையில் இருக்கிறது. தற்போது 6 லட்சம் கோடிக்கும் அதிகமாக மகாராஷ்டிரா அரசுக்கு கடன் இருக்கிறது. எனவே மகாராஷ்டிரா அரசு தரப்பில் ரயில்வே திட்டங்களுக்கு கொடுக்கவேண்டிய பங்கைக்கூட கொடுக்காமல் இருக்கிறது. இதனால் ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.