2024ல் பாஜக ஆட்சிக்கு வராது… அமித்ஷா தலைமறைவாகிவிடுவார் : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் தாக்கு!!

கொல்கத்தா : 2024ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வராது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறையில் அமல்படுத்தப்படாது என திரிணாமுல் காங்கிரஸ் புரளியை பரப்பி வருகிறது என்றார். ஆனால் கொரோனா அலை முடிவுக்கு வந்த உடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தும் என்று உறுதியாக அவர் தெரிவித்தார். மேற்கு வங்கத்திலும் இந்த சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும் என்று கூறிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் அப்போதும், இப்போதும், எப்போதும் நடைமுறைபடுத்தக் கூடியது தான் என்றார். அமித்ஷாவுக்கு பதிலளித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், ‘2024ல் பாஜக ஆட்சிக்கு வராது. குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நாம் ஒன்றாக இருக்க வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் எதுவும் அமல்படுத்தப்படாது. நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகளை புல்டோசர் கொண்டு உடைக்க முயற்சிக்கும் பாஜகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். அமித்ஷா தலைமறைவாகிவிடுவார். மேற்குவங்காளத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது. உத்தரபிரதேசத்தில் இன்று ஒரு பெண் நியாயம் கிடைவேண்டுமென்றால், பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாக்கப்படுகின்றனர்,’என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.