ஓங்கோல்: ஆந்திர மாநில மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி.ராமாராவின் மனைவி லட்சுமி சிவபார்வதி தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவர் நேற்று ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், ஓங்கோலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் பலம் இருந்தால், ஆத்மகூரு சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் தெலுங்கு தேசம் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். அதை செய்யாமல், மறைமுகமாக பாஜக கூட்டணிக்கு விட்டுக்கொடுத்து விடுவார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. என்.டி.ராமாராவ் நிறுவிய தெலுங்கு தேசம் கட்சி வேறு. தற்போது இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வேறு.
சந்திரபாபு நாயுடு கட்சி பொறுப்பை ஏற்ற பின்னர் பெண்கள் அக்கட்சியில் மதிக்கப்படுவதில்லை. அவரது மகன் லோகேஷ் வந்த பின்னர், அக்கட்சியில் மரியாதையும் குறைந்து விட்டது. ஆனால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பேருந்து யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். முதல்வர் ஜெகன் ஆட்சியில் சந்திரபாபுவும், அவரது தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கின்றனர். எப்படியாவது ஆளும் கட்சி மீது சேற்றை வாரி இறைக்க வேண்டுமென்றே மக்களிடையே பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு லட்சுமி சிவபார்வதி கூறினார்.