ONGC: அரபிக்கடலில் விழுந்த ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் – 4 பேர் உயிரிழப்பு!

அரபிக்கடலில் ஓ.என்.ஜி.சி. பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது விபத்தானது. இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்தனர்.

ஓ.என்.ஜி.சி. எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் அரபிக் கடலில் பல எண்ணெய் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது. அவை கடலுக்கு அடியில் உள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்ய பயன்படுகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் இருந்து அரபிக் கடல் வழியாக ஓ.என்.ஜி.சி. பணியாளர்களை ஏற்றிச் சென்ற பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, இறங்க வேண்டிய இடத்தில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.

மும்பைக்கு மேற்கே உள்ள சாகர் கிரண் என்னும் எண்ணெய் கிணறு அருகே இந்த விபத்து நடந்தது. விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக அந்த இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்து உள்ளதாக ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.