இந்தியாவில் நுழைந்த மங்கி பாக்ஸ்? கேரளாவில் தனிமையில் ஒருவர்.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம் : கேரளாவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும், அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. 1960ம் ஆண்டில் இந்த காய்ச்சல் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே அதிகமாக பரவி வந்த இந்தக் காய்ச்சல் சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியது. இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உட்பட 57 நாடுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தற்போது இந்த நோய் பரவியுள்ளது.இதையடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியது: கடந்த சில தினங்களுக்கு முன்பு அமீரக நாட்டிலிருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்காக பூனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் முடிவு கிடைக்கும். அதன் பிறகே அவருக்கு பரவியிருப்பது குரங்கு காய்ச்சல் தானா என்பதை உறுதி செய்ய முடியும். நோய் அறிகுறி உள்ள அவர், தன்னுடைய வீட்டினருடன் மட்டுமே தொடர்பில் இருந்துள்ளார். இதனால் வேறு யாரும் அச்சப்படத் தேவையில்லை. அவரது வீட்டில் உள்ளவர்களும் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.