வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றோம் : வெங்கட்பிரபு கிண்டல்

தமிழ்ப்படம் என டைட்டில் வைத்து சினிமாக்களில் ஹிட் அடித்த காட்சிகளை எல்லாம் கலாய்த்து காமெடி தோரணம் கட்டியவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன். மீண்டும் அதேபாணியில் அரசியல் நையாண்டியாக 'தமிழ்ப்படம் 2.O' என்கிற படத்தை இயக்கினார். தற்போது அவற்றில் இருந்து மாறுபட்டு விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தநிலையில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவருக்கு இயக்குனர் வெங்கட்பிரபு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.

அதில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் சி.எஸ்.அமுதன் ப்ரோ. உங்களுடைய முதல் ப்ரெஷ் படத்திற்காக காத்திருக்கிறேன்.. சும்மா ஜோக்குக்காக சொன்னேன்.. நிஜமாகவே உங்களது படத்தை எதிர்பார்க்கிறேன்” என கூறியிருந்தார் வெங்கட் பிரபு.. சி.எஸ் அமுதனின் இரண்டு படங்களுமே கதை என எதுவுமே இல்லாமல் ஸ்பூப் பாணியிலான படங்களாக வெளியானதால் அதை குறிக்கும் விதமாக கிண்டலடித்திருந்தார் வெங்கட் பிரபு..

ஆனால் வெங்கட் பிரபுவின் படங்களிலும் பெரும்பாலும் கதை என்பதை தேடவேண்டி இருக்கும் அல்லவா.? பதிலுக்கு அதை குறிப்பிட்டு, “ரொம்ப நன்றி சார்.. கதையம்சத்துடன் உருவாகும் உங்களது முதல் படத்தை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என கிண்டல் அடித்தார் சி.எஸ்.அமுதன்.. இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு “வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றோம்” என மீண்டும் கிண்டலாக பதில் அளித்தார்.

இவர்களது வெளிப்படையான இந்த உரையாடலால் உற்சாகமான நெட்டிசன் ஒருவர், ராஜகுமாரன் படத்தில் வடிவேலுவின் தங்கையை பெண் பார்க்க வந்த கவுண்டமணியும் செந்திலும் தங்களை பற்றிய உண்மைகளை மாறி மாறி உளறிக்கொட்டுவார்களே அந்த வீடியோவை பகிர்ந்து, இதைத்தான் ஞாபகப்படுத்துறீர்கள் டைரக்டர்ஸ் என தங்கள் பங்கிற்கு அவர்களை கிண்டலடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.