தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் தந்தையின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரேஷ்மா(20).
கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர், கூலித் தொழிலாளியான மாணிக்கராஜா(26) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தந்தையின் எதிர்ப்பை மீறி மாணிக்கராஜா-ரேஷ்மா ஜோடி ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊருக்கு திரும்பிய காதல் ஜோடியிடம் முத்துக்குட்டி சண்டையிடவே, ஊர்மக்கள் ஒன்று கூடி சமாதானம் செய்தனர்.
அதன் பின்னர் மாணிக்கராஜாவும், ரேஷ்மாவும் அதே ஊரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
எனினும் ஆத்திரம் அடங்காத ரேஷ்மாவின் தந்தை வீட்டிற்குள் புகுந்து, மகள் மற்றும் மருமகன் இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தப்பியோடிய முத்துக்குட்டியை தேடி வருகின்றனர்.
திருமணமான 28 நாட்களில் புதுமண காதல் ஜோடி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.