தான் பிரதமரானால் பிரிட்டனுக்கு நெடுங்காலமாகப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சீனாவிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளப்போவதாக ரிசி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ள ரிசி சுனக், சீன, ரஷ்ய நாடுகளுடனான உறவில் பலவீனமானவர் என அவரது நெருங்கிய போட்டியாளரான லிஸ் டிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் டெய்லி மெயில் நாளிதழுக்கு ரிசி சுனக் அளித்துள்ள பேட்டியில், தான் பிரதமர் ஆனால் பிரிட்டனில் சீன மொழி மற்றும் பண்பாட்டைப் பயிற்றுவிக்கும் 30 கன்பூசியஸ் மையங்களும் மூடப்படும் என அறிவித்துள்ளார்.
பிரிட்டன் பல்கலைக்கழக ஆய்விருக்கைகளுக்கு வெளிநாட்டு நிதியுதவி பற்றிய விவரங்களை வெளியிடச் செய்து, அவற்றில் இருந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை வெளியேற்றப் போவதாகவும் உறுதியளித்துள்ளார்.
பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் ஊடுருவித் தொழில்நுட்பங்களைத் திருடுவதாகச் சீனா மீது ரிசி சுனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.