அதிமுக அலுவலகத்தில் ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி டிஜிபியிடம் சி.வி.சண்முகம் மனு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்கள், பொருட்கள் திருடப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உள்துறை செயலர், டிஜிபியிடம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார்.

தமிழக உள்துறைச் செயலர்,டிஜிபி, சென்னை காவல் ஆணையர், மற்றும் ராயப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கலவரத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல, மோதலின்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், பத்திரங்களை ஓபிஎஸ்மற்றும் அவரது ஆதரவாளர்கள்வாகனத்தில் ஏற்றிச் செல்லும்வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்தும், ராயப்பேட்டை போலீஸார்நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்மூலம், போலீஸாரின் அலட்சியப்போக்கு தெரியவருகிறது.

எனவே, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் மற்றும் தலைமை அலுவலகத்தில் நடந்த திருட்டு வழக்கை சிபிஐ அல்லது அதற்கு நிகரான பிற ஏஜென்சிகளுக்கு உடனடியாக மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸில் ஓபிஎஸ் தரப்பு புகார்

இதற்கிடையில், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி கடந்த 23-ம்தேதி தங்களிடம் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வந்தது. அதில் சில ஆவணங்களைக் குறிப்பிட்டு ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் திருடிச் சென்றதாகக் கூறியுள்ளார். அதில் உண்மை இல்லை.

சீல் அகற்றப்பட்ட பிறகு, அலுவலக மேலாளர் உள்ளிட்ட சில அலுவலர்கள் உள்ளே சென்றனர். மேலாளர் மகாலிங்கம், துணை மேலாளர் மனோகரன், சில ஊழியர்கள்கூட்டு சேர்ந்து தலைமைக் கழகத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்களைத் திருடியுள்ளனர்.

குண்டர்களை ஏவிவிட்டு சேதம் ஏற்படுத்த தூண்டிய பழனிசாமி, சி.வி.சண்முகம், தி.நகர் சத்யா, விருகை ரவி, எம்.கே.அசோக், ஆதிராஜாராம், மேலாளர் மகாலிங்கம், மனோகரன் மற்றும் குண்டர்கள், ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.