ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்: இங்கிலாந்து பிரதமர் தேர்தலையொட்டி அரங்கேறிய காரசார விவாதம்!

இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் பணியில், ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக நடத்தப்படும் தேர்தலில், இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் உட்பட மொத்தம் 8 எம்.பி-க்கள் போட்டியிட்டனர். இதில் பல்வேறு சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு எம்.பி-க்களாக வெளியேற, தொடக்கம் முதலே அதிக வாக்குகளுடன் ஆதிக்கம் செலுத்திவந்த ரிஷி சுனக் – லிஸ் டிரஸ் ஆகியோர் தற்போது இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

போரிஸ் ஜான்சன்

இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற ஒருவரையொருவர் போட்டி போட்டுக்கொண்டு நிர்வாகிகளிடையே வாக்குறுதிகளை அளித்துவருகின்றனர். இருப்பினும், கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட தனியார் கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக், லிஸ் டிரஸ்-ஐ விட பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். அதாவது கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களில் 38 சதவிகித பேர் மட்டுமே ரிஷி சுனக்குக்கும், 62 சதவிகித பேர் லிஸ் டிரஸ்-கும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரிஷி சுனக்

இந்த நிலையில், ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் நேற்று முன்தினம் இரவு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ஆதரவு திரட்டியுள்ளனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே காரசாரமான விவாதம் அரங்கேறியது.

விவாதத்தின்போது இருவருக்கும் பொதுவாகக் கேட்கப்பட்ட கேள்வியில், சீனா மீதான இங்கிலாந்து கொள்கை மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று இருவருமே பதிலளித்தனர். இருப்பினும் ரிஷி சுனக், முன்னதாக லிஸ் டிரஸ் சீனாவுக்குச் சென்றிருந்ததைச் சுட்டிக்காட்டி, சீனாவுடனான பிரிட்டனின் உறவு பொற்காலம் என்று லிஸ் டிரஸ் முன்னர் கூறியதாக அவர் மீது குற்றம் சாட்டினார்.

மேலும், சீனாவின் சைபர் தாக்குதலை சமாளிக்கவும், தொழில்நுட்ப பாதுகாப்பில் சிறந்த நடைமுறையைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய சர்வதேச கூட்டணியை நான் உருவாக்குவேன் என்று ரிஷி சுனக் கூறினார்.

அதைத்தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாக, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்களைப் பாதுகாக்க இங்கிலாந்து கடற்படையிடம் அனுப்பப்படுமா என்ற கேள்வி இருவரிடமும் முன்வைக்கப்பட்டது. இதற்கு இருவருமே அனுப்பப்படாது என பதிலளிக்க, உக்ரைனுக்கு ஆதரவாகப் பொருளாதார உதவி போன்றவற்றை இங்கிலாந்து தொடர்ந்து செய்யும் என ரிஷி சுனக் கூடுதலாகப் பதிலளித்தார். தொடர்ந்து லிஸ் டிரஸ், ரஷ்யா-உக்ரைன் போரில் இங்கிலாந்து நேரடியாகத் தலையிடாது என்று கூறினார்.

ரிஷி சுனக்

அதைத்தொடர்ந்து லிஸ் டிரஸை தாக்கிப்பேசிய ரிஷி சுனக், “40 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் நிதியில்லாத வரிக் குறைப்புகளை நீங்கள் உறுதியளித்துள்ளீர்கள். உங்களின் வரி குறைப்பு திட்டம் மில்லியன் கணக்கான மக்களைத் துயரத்தில் தள்ளும்” என்று வாதிட்டார்.

அதைத்தொடர்ந்து கருவூல அமைச்சராக ரிஷி சுனக் கொண்டுவந்த திட்டங்கள் குறித்து அவரை விமர்சித்த லிஸ் டிரஸ், “கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரிகளை அவர் உயர்த்தியுள்ளார். அதனால் இப்போது மந்தமான நிலையை நாங்கள் எதிர்கொள்கிறோம். இதற்கான உண்மைகளும் புள்ளிவிவரங்களில் உள்ளது. மக்கள் தத்தளிக்கின்றனர் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் விரைந்து செயல்படுவேன்” என்று கூறினார்.

ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்

செப்டம்பர் 2-ம் தேதியோடு வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், இவர்களின் இந்த காரசாரமான விவாதம் இப்போதே தேர்தலில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியுள்ளது. கருத்துக்கணிப்பில் என்ன வந்தாலும், செப்டம்பர் 5-ம் தேதி தான் தேர்தலில் யார் வெற்றிபெற்றார் என்பது தெரியவரும். அதுவரையில் பொறுத்திருப்போம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.