ஒரு தாசில்தாரின் கதை! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் கள்ளிவயல் என்றொரு கிராமம் இருக்கிறது. அது முன்பு இராமநாதபுரம் ஜில்லாவில் இருந்தது. கள்ளிவயல் கிராமத்தில் கணபதி மற்றும் ராஜம்மாள் என்ற தம்பதியினர் 1930-களில் வசித்து வந்தனர். அவர்களுக்கு 1939 ம் வருடம் பிப்ரவரி மாதம் 14 ம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சோமசுந்தரம் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அந்தக்குழந்தை தன் பெயரைப்போலவே அழகிலும் மற்றும் குணத்திலும் சிறந்து விளங்கியது. சோமசுந்தரத்திற்கு குடும்பச்சூழ்நிலை காரணமாக இளம் வயதிலேயே வேலைக்குப்போக வேண்டிய கட்டாயம். அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து குடும்பப்பொறுப்புகளை ஏற்று தனது முறைப்பெண்ணான தெய்வகுஞ்சரியை திருமணம் செய்து கொண்டார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இல்லம் அமைத்து தனது மனைவியுடன் குடியேறினார்.

சிவகங்கை

நாட்கள் உருண்டோடின. சோமசுந்தரம் – தெய்வகுஞ்சரி தம்பதியினருக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் பிறந்தார்கள். குழந்தைகள் அனைவரையும் நன்றாகப் படிக்க வைத்தார்கள். தனது குழந்தைகளை மட்டுமல்லாமல் தனது சகோதரரின் குழந்தைகளையும் தன் குழந்தை போலவே பாவித்து நடத்தினார்கள். அது மட்டுமல்லாமல் சோமசுந்தரம் தனது சகோதரிகளையும் கவனித்து அவர்கள் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளையும் செய்து வந்தார். சோமசுந்தரம் அலுவலகத்தில் கடுமையாக உழைத்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று தாசில்தார் ஆனார்.

சோமசுந்தரம் அவர்கள் தன் வாழ்க்கையில் சந்தித்த இன்னல்களும் சவால்களும் மிக அதிகம். பல குடும்ப பிரச்சனைகள் அலுவலக பிரச்சனைகளை சாமர்த்தியமாகக் கையாண்டு சுமூகமாக தீர்த்து வைத்தார். இவர் இலங்கையில் போர் நடந்த போது இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் என்ற ஊரில் பணி புரிந்தார். அப்பொழுது அகதிகள் முகாமிற்கு தன்னாலான பணிகளை செய்து சீராக செயல்பட்டார்.

ஒரு சமயம் அவர் முதுகுளத்தூரில் பணி புரிந்த போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுப்பெற்றார். மேலும் ஒரு முக்கியமான விழாவின் போது நடைபெற்ற ஒரு பெரிய அசம்பாவிதத்தை மிகவும் பொறுமையுடன் நிதானமாகக் கையாண்டு விழாவிற்கு எந்த இடையூறும் இல்லாமல் நன்றாக நடத்தி வைத்தார். இவர் ஓய்வு பெற்ற பிறகும் கூட மிகவும் சுறுசுறுப்பாகவே தன்னை வைத்துக்கொண்டார். பரமக்குடியிலிருந்து மதுரையில் குடியேறி பலருக்கும் பலவிதமான உதவிகளை செய்து வந்தார்.

தாசில்தார் சோமசுந்தரம்

அந்த நாள் 2020 ஜூலை மாதம் 7 ம் தேதி, செவ்வாய்க்கிழமை தெய்வகுஞ்சரி அம்மாள் அன்று நடக்கப்போவதை அறியாமல் வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து தன் கடமைகளை செய்ய ஆரம்பித்தார். அதற்கு முன்பே எழுந்த அவர் கணவர் சோமசுந்தரம், தனக்கு மூச்சுத்திணறல் இருப்பதாகவும், மருத்துவமனைக்கு செல்வதாகவும் கூறினார். அவர் குழந்தைகள் அனைவரும் வெளியூரில் இருந்ததால் மற்றும் கொரோனா காரணமாக அனுமதிச்சீட்டு இல்லாமல் யாரும் பயணம் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையினால் அவர் உள்ளூரில் இருந்த ஒரு சிலரின் உதவியுடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கே அவர்கள் அரசாங்க மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி அன்று மாலையே அவர் உயிரிழந்தார். எத்தனையோ சொந்தங்கள் இருந்தும் யாரும் இல்லாமல் மனைவி கூட அருகில் இல்லாமல் அவர் இறைவனடி சேர்ந்தார்.

அவர் வாழ்வு ஒரு பாடம்

தாசில்தார் சோமசுந்தரம் அவர்கள் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த சில நல்ல விஷயங்கள் –

  • தினமும் அதிகாலையில் எழுவார்

  • நடைப்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு

  • நேர்மை, கடமை மற்றும் நேரம் தவறாமை

  • சமூக சிந்தனை, தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்கு எப்பொழுதும் செய்தார்

  • தனது குழந்தைகள் மட்டுமல்லாது உறவினர்கள் அனைவரையும் அனுசரித்து நடந்தார்

  • உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடும்ப விசேஷங்களுக்கு விட்டுக்கொடுக்காமல் சென்று வந்தார்

  • பண வசதி இருந்தும் கடைசி வரை எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். எப்பொழுதும் பேருந்தில் தான் பயணிப்பார்.

  • ஆறு குழந்தைகள் இருந்தும் யாரையும் சார்ந்து வாழாமல், யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் கடைசி வரை சுயமாகவே வாழ்ந்தார்

  • கடமையை மீறிய பாசத்தால் தனக்கு வயதான போதும் குழந்தைகளின் குடும்பங்களுக்கு கடைசி வரை உதவியாகவே இருந்தார்

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவைகளெல்லாம் எளிமையாகத் தோன்றினாலும் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிப்பது மிகவும் கடினம். அவரது வாழ்க்கையிலிருந்து கற்ற பாடத்தை அவரின் குடும்பத்தினர் பலரும் கடைப்பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள். நாமும் ஒன்றிரண்டையாவது கடைப்பிடிக்க முயற்சி செய்யலாமே!

(இது உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.