சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விழா தொடர்பான ஏற்பாடுகளை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், முக்கியத் தலைவர்கள், பிற மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு தமிழக அரசு சார்பில் விழாவில் பங்கேற்க அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்துகொண்டார். நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக இன்று காலை நடிகர் ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில்,” நான் மிகவும் விரும்பும் உள்ளரங்கு விளையாட்டு செஸ். அனைத்து செஸ் வீரர்களுக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருந்தார்.