தமிழகத்திலும் குரங்கம்மை பாதிப்பா? ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள்… அமைச்சர் விளக்கம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 பேர் குரங்கம்மை நோய் அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனே அனுப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது குரங்கம்மை நோய் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டு மக்களை அச்சுறுத்துகிறது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் இருவருக்கு குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டது. தொடர்ந்து அண்டை மாவட்டமான கன்னியாகுமரியிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
image
அப்படி நடத்தப்பட்ட சோதனையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி தெரியவந்திருக்கிறது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பபட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியான பின்பு தான் குரங்கம்மை பாதிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் காணப்பட்டுள்ளதா என்பது தெரிய வரும்.
image
தொடர்ந்து கேரளா – தமிழ்நாடு சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், `தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை’ எனக் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.