ராஜஸ்தானில் இருந்து கேரளாவுக்கு 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்: பாஸ்டர் உள்பட 3 பேர் கைது

திருவனந்தபுரம்: ராஜஸ்தானில் இருந்து 12 சிறுமிகள் ரயிலில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக எர்ணாகுளத்தைச் சேர்ந்த பாஸ்டர் உள்பட 3 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலம் ஓக்காவில் இருந்து கடந்த 26ம் தேதி எர்ணாகுளம் நோக்கி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தை அடைந்தது. ரயிலில் 8 வயது முதல் 18 வயதிலான சிறுமிகள் 12 பேர் பயணம் செய்தனர். அவர்களுடன் 4 பெரியவர்களும் இருந்தனர். அவர்களது செயல்பாடுகளில் பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.உடனே கோழிக்கோடு ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில், எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரில் உள்ள ஒரு தனியார் ஆதரவற்றோர்  காப்பகத்திற்கு சிறுமிகளை அனுமதியின்றி அழைத்து செல்வது தெரியவந்தது. சிறுமிகளை அழைத்து வந்த 2 பேர் பெற்றோர் என்பதும், மற்ற 2 பேர் சிறுமிகளை கடத்தும் புரோக்கர்களான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லோகேஷ் குமார், ஷியாம் லால் என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரும்பாவூரில் உள்ள கருணா பவன் என்ற ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்திற்கு சிறுமிகளை அழைத்து செல்வது தெரியவந்தது. இந்த காப்பகத்தை பாஸ்டரான ஜேக்கப் வர்கீஸ் நடத்தி வருகிறார். பாஸ்டர் ஜேக்கப் வர்கீசையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாகவும், பாஸ்டர் உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.