சர்வகட்சி ஆட்சிக்கான முன்மொழிவுகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும் ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசியல் கட்சிகளுடன் பல நாட்களாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒவ்வொரு கட்சியும் முன்வைத்த முன்மொழிவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (08) பங்குபற்றிய அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவாக வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள 11 சுயேட்சைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் 43ஆவது (சேனாங்கய) பிரிவினருடன் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன) தேசிய மக்கள் சக்தி ( ஜாதிக ஜனபல வேகய) மற்றும் இன்னும் சில தமிழ் அரசியல் கட்சிகள் மாத்திரமே எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த எஞ்சியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், மக்களின் அபிலாஷைகளுக்காக அரசியல் சித்தாந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் அனைவரது ஆர்வத்தையும் பாராட்டினார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளக் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி அவர்களின் நிலைப்பாட்டுடன் 43ஆவது பிரிவு (சேனாங்கய) நம்பிக்கையுடன் செயற்படுவதாகவும், அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கும்போது அரசியல் கட்சி அமைப்பை மறந்து நிபுணத்துவம் வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டிய தேவை வலுவாக இருப்பதாகவும் 43ஆவது பிரிவின் (சேனாங்கய) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்..

அரசியல் சீர்திருத்தங்களினால் மாத்திரம் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்த திரு.சம்பிக்க ரணவக்க அவர்கள், தொழில் வல்லநர்களின் பங்களிப்பும் முக்கிய காரணியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். கல்வி சீர்திருத்தங்களில், எதிர்கால உலகுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாட்டை கட்டியெழுப்பும் பொதுவான வேலைத்திட்டத்தை தயாரிப்பதன் மூலம் படிப்படியாக முன்னேற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பிலான கலந்துரையாடலில் அனைத்து அரசியல் கட்சிகளின் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அடிப்படை ஆவணத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் மூலம் சர்வகட்சி அரசாங்கம் பற்றிய எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்ள முடியும் என தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சர்வகட்சி அரசாங்கத்திற்கான பொதுவான வேலைத்திட்டம் தொடர்பில் தமது குழு கலந்துரையாடியதாகவும், அரசியல் கட்சிக் கொள்கைகள் தொடர்பில் இணக்கம் காண முடியாவிட்டாலும், பொதுவான இணக்கப்பாடு தேவை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அசங்க நவரத்ன, பிரேமநாத் சி. தொலவத்த, கரூ பரணவிதான, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-06

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.