புதுடெல்லி: பேருந்து டிரைவர் ஒருவர், ஜன்னல் வழியாக தாவிய புலிக்கு இறைச்சி துண்டு கொடுத்ததை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். ‘தி அமேசிங் டைகர்’ என்ற இணையதள பக்கத்தில் வெளியான வீடியோவில், பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஜன்னலைத் திறந்து புலிக்கு இறைச்சி துண்டை ஊட்டுகிறார். காலில் இறைச்சித் துண்டை வாங்கும் அந்தப் புலி, தனது வாயில் போட்டுக் கொண்டது. அந்த வீடியோவில் பேருந்து ஓட்டுனர் பஸ்சின் ஜன்னலை பாதி திறப்பதும், புலி ஓடி வந்து இறைச்சியை உண்பதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இறைச்சியை வாங்கி சாப்பிட்ட பிறகு, புலி தனது கைகளால் முகத்தை சொறிவதையும் காண முடிகிறது. இந்த வீடியோவை கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். அதில் ஒருவர், ‘பொதுவாக புலிகள் ஒரே பாய்ச்சலில் சிறிய இடங்களுக்குள் எளிதாக நுழைய முடியும். ஆனால் நீங்கள் இவ்வாறு நடந்து கொள்வது சரியல்ல. லைக்கை பெற வேண்டும் என்பதற்காக முட்டாள்தனமாக செயல்படாதீர்கள். மேலும் இதுபோன்ற பதிவுகளை தவிருங்கள்; காட்டு விலங்குகளை அதன்போக்கில் வாழவிடுங்கள்’ என்று கமெண்ட் மூலம் கூறியுள்ளார்.