தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: மத்திய அரசு கடிதம் 

சென்னை: தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் செந்தில் குமாருக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக, சராசரியாக தினசரி 2,044 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இந்தியாவின் வாராந்திர புதிய தொற்று பாதிப்பில் 7.7% தமிழகத்தின் பங்களிப்பு.

ஜூலை 28ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நடத்தப்பட்ட மொத்தப் பரிசோதனைகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வரவிருக்கும் மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பல்வேறு பண்டிகைகள், கொண்டாட்டங்களின் மக்கள் கூட வாய்ப்புள்ளது. இது அதிக எண்ணிக்கையிலான மக்கள் மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை மேற்கொள்வதற்கும், குறிப்பிட்ட இடங்களில் ஒன்றுகூடுவதற்கும் வழிவகுக்கும். இதனால் கரோனா பரவ வாய்ப்பு உள்ளது.

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போதுமான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கவும், பயனுள்ள தொற்று மேலாண்மையை அரசு கண்காணிக்க வேண்டும. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதையும், தொடர்ந்து கண்காணிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

சந்தைகள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ரயில் நிலையங்கள் போன்ற நெரிசலான இடங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றபடுவதை உறுதிசெய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். செப்டம்பர் 30 வரை அனைத்து அரசு கொவிட் தடுப்பூசி மையங்களில், தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியான மக்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்த வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.