ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க விரும்பும் மத்திய அரசு… நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி உரையும் பின்னணியும்!

மத்திய அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும் நிதி ஆயோக்கின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டமானது டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள கலாசார மையத்தில் நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்றது. இதில், 23 மாநிலங்களின் முதல்வர்கள், மூன்று துணை நிலை கவர்னர்கள், இரண்டு யூனியன் பிரதேச நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இது குறித்து சந்திரசேகர ராவ் கூறுகையில், “பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையேற்றம், டாலருக்கு சமமான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல விஷயங்களில் நிதி ஆயோக் அமைப்பு எதுவும் செய்ய முடியவில்லை. மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. எனவே, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து என் எதிர்ப்பை தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழி நடத்திய இந்த கூட்டத்தில், நான்கு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாற்றுப் பயிர்கள் மற்றும் பருப்பு, எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட வேளாண் உற்பத்தியில் சுயசார்பு நிலையை எட்டுவது, பள்ளி கல்வியில் புதிய தேசியக் கொள்கையை அறிமுகம் செய்வது, உயர்கல்வியில் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகம் செய்வது, நகர்ப்புற நிர்வாகம் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டன.

நிதி ஆயோக்கின் 7வது நிர்வாக கவுன்சில் கூட்டம்

இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசிம் போது, “கொரோனா வைரஸ் பரவலின் போது, அனைத்து மாநில அரசுகளும் மிகச் சிறப்பாக செயல்பட்டன. கொரோனா பரவலைத் தடுப்பது, தடுப்பூசி வழங்குவதில் உலக நாடுகளுக்கு மிகச் சிறந்த உதாரணமாக நம் நாடு விளங்கியது. இதற்கான பாராட்டு அனைத்து மாநிலங்களையும் சேரும். நம் கூட்டாட்சி தத்துவம் மற்றும் நடைமுறையானது, உலக நாடுகளுக்கு சிறந்த மாடலாக விளங்குகிறது. எந்தக் கடினமான சவாலையும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சாதனை படைக்கலாம் என்பதை நாம் நிரூபித்துள்ளோம்.

‘ஜி – 20’ எனப்படும் 20 நாடுகள் அடங்கிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின், 2023-ஆம் ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்க உள்ளது. இந்தியா என்றால், புதுடெல்லி என்றே உலக நாடுகள் பார்க்கின்றன. ஆனால் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அடங்கியதே இந்தியா என்பதை உலக நாடுகளுக்கு காட்டுவோம். ஜி – 20 தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காக ஒரு சிறப்புக் குழுவை அமைத்து, அதில் மாநிலங்களும் இணைக்க வேண்டும். நவீன தொழில்நுட்ப உதவிகளுடன் வேளாண் துறையில் நாம் சுயசார்பு நிலையை எட்ட வேண்டும். நகர்ப்புற வளர்ச்சியை ஒரு சவாலாகப் பார்க்கக் கூடாது. அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, தேவையான வசதிகளை, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்” என்றார்.

நிதி ஆயோக்கின் 7வது நிர்வாக கவுன்சில் கூட்டம்

மேலும், ஜி.எஸ்.டி வரி குறித்துப் பேசுகையில், “ஜி.எஸ்.டி. வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலமும் கவனம் செலுத்த வேண்டும். இறக்குமதியை குறைப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் அதற்கான வாய்ப்புகளையும் அடையாளம் காண வேண்டும். உள்ளூர் பொருள்களைப் பயன்படுத்த மக்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்” என்றார் மோடி.

இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், “மோடி அரசாங்கத்திற்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஏழை எளிய மக்கள், நடுத்தட்டு மக்களிடமிருந்துதான் வரி வசூலிக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வருகிறார்கள். உலகம் முழுவதும், வளர்ந்த நாடுகளில் நிதி நெருக்கடிகள் வரும் போது அங்கிருக்கிற ‘சூப்பர் ரிச்’ எனப்படும் மக்களிடம்தான் வரிவசூல் செய்கிறார்கள். ஆனால், இங்கு ஜி.எஸ்.டி என்று சொல்லி அரிசிக்குக் கூட வசூலிக்கிறார்கள். 25 கிலோக்கு மேல் அரிக்கு வரி போட மாட்டேன். 5 கிலோ வாங்குபவர்களுக்கு வரி போடுவேன் என்று சொன்னால் அந்த சித்தாந்தமே எவ்வளவு தவறான அணுகுமுறை. இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஏழை, நடுத்தர மக்கள்தான்” என்கிறவர், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் பேசிய விஷயங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.

பீட்டர் அல்போன்ஸ்

“நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசும் போது, ‘உங்கள் தமிழ்நாடு…’ என்று குறிப்பிடுகிறார், ஒரு நிதியமைச்சர் அவ்வாறு சொல்லலாமா? அப்படி என்றால் இவர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் சம்பந்தம் இல்லையா? அவர் தமிழ்நாட்டுக்கு நிதி அமைச்சர் இல்லையா?” என்று கேள்விகளை முன் வைத்ததோடு, “இங்கு வரி சலுகை எல்லாம் பெரிய பெரிய பணக்காரர்களுக்குத்தான்” என்கிறார்.

“அம்பானி ரூ.55ஆயிரம் கோடி வருமானத்திற்கு ரூ.1,400 கோடி வரி கட்டுகிறார். ஆனால், ஒரு நடுத்தர வர்க்கத்தில் வருஷத்திற்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் வந்தால், ஏறக்குறைய ரூ.40 லட்சம் வரை வரியாக கட்டுகிறார்கள். எனவே இதைப் பார்க்கும் போது இங்கு யாருக்காக அரசாங்கம் நடக்கிறது. அரசாங்கத்தின் வருவாயில் யாருக்கு முன் உரிமை என்று பார்த்தால், குறிப்பிட்ட மேல் தட்டு மக்களுக்காகத்தான் நடக்கிறதே தவிர ஏழை எளியவர்களுக்காக இல்லை. மத்திய அரசைப் பொறுத்தவரை வரி வருவாய் பெறுவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கிறது. அதில், வசப்பட்டவர்களிடமிருந்து வரி வசூலிக்காமல் சுடுகாட்டிலிருக்கும் தகன மேடைக்கு, பால், தயிர் , தீப்பெட்டி… என வரி வசூலித்தீர்கள் என்றால் அது ஏழை எளிய மக்களுக்குப் பெரிய சுமையாக அமையும்.

சமீபத்தில் உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி-க்கு பிறகு அநேக குடும்பங்களுக்கு இந்த மாதம் பட்ஜெட் போடுவதற்கே பெரிய சங்கடமாக இருக்கிறது என்கிறார்கள். இன்னமும் வரி வசூல் செய்வோம் என்றால் யாரிடம் வசூல் செய்வீர்கள்? இதற்கு மாற்று என்னவென்றால், வரி வசூலிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும் போது எங்கெங்கு வசூலிப்பது என்பது தெரியும். வருமான வரி மட்டும் தான் மத்திய அரசு வசூலிக்க வேண்டும். ஆனால், உங்கள் தேவைக்காக எல்லா வரியும் வசூலித்துவிட்டு, வருமானவரிகள் வசூலிக்காமல் தொடர்ந்து பெரும் பணக்காரர்களுக்குச் சலுகைகள் கொடுக்கிறீர்கள். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது” என்கிறார் அழுத்தமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.