பாஜகவுக்கு குட்-பை சொல்லி உள்ள நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார்.
பீகார் மாநிலத்தில், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே, முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமாருக்கும், பாஜகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.
இந்த மோதல் முற்றியதைத் தொடர்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது என, நிதிஷ் குமார் முடிவு செய்தார். இதை தெரிந்து கொண்ட, மாநிலத்தின் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாஜகவை விட்டு விலகினால் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தர தயார் என அறிவித்தது.
இந்நிலையில் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களுடன் ஆலோசனை நடத்திய நிதிஷ் குமார், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி விடுவது என முடிவு செய்தார். இதன்படி இன்று மாலை 4 மணி அளவில், ஆளுநர் பாகு சவுகானை சந்தித்த நிதிஷ் குமார், முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கடிதத்தை அளித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லாம் முடிந்து விட்டது.. பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டோம் எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ் மனைவி ரப்ரி தேவி வீட்டிற்கு நிதிஷ் குமார் சென்றார். அங்கு தேஜஸ்வி யாதவை சந்தித்துப் பேசினார். அப்போது ஆட்சி அமைப்பது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் செய்து கொண்ட ஒப்பந்தம்படி, பீகார் மாநில முதலமைச்சராக, நிதிஷ் குமார் மீண்டும் பதவி ஏற்க உள்ளார். துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்க உள்ளார். அமைச்சர்களுக்கான துறைகளை, நிதிஷ் குமாரே தேர்வு செய்து ஒதுக்கீடு செய்வார். பீகார் மாநில சட்டப்பேரவை சபாநாயகர் பதவி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே, மாநிலத்தில் புதிய கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக, ஆளுநர் பாகு சவுகானை, நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள், விரைவில், நேரில் சந்தித்து உரிமை கோர உள்ளனர். கூட்டணி அரசில், காங்கிரசுக்கும் அமைச்சரவையில் ஒருசில இடங்கள் ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
243 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவையில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு, 75 எம்எல்ஏக்கள், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 43 எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு, 74 எம்எல்ஏக்கள், காங்கிரசுக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.