இலவசங்கள் குறித்து கவலைப்படுவோர் வங்கி வாராக் கடன் தள்ளுபடி பற்றி கவலைப்படாதது ஏன்?

இவவச கவசம்:
அரசியல் கட்சிகள் என்னதான் வளர்ச்சி திட்டங்கள் பற்றி பேசினாலும் தேர்தல் போரில் மக்கள் மனங்களை வெல்ல அவை இலவச அறிவிப்புகளையே கவசங்களாக கைக்கொள்கின்றன. அது…கருணாநிதி ஆட்சி காலத்தி்ல் செயல்படுத்தப்பட்ட இலவச டிவி வழங்கும் திட்டமாக இருந்தாலும் சரி… ஜெயலலிதா ஆட்சியில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டராக இருந்தாலும் சரி… கருணாநிதி கோடி போட்டால், ஜெயலலிதா ரோடு போடும் அளவுக்கு இலவசங்களை மக்களுக்கு வாரி வழங்கினார்.

கருணாநிதியின் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய திமுக ஆட்சியிலும் பெண்களுக்கு மாநகர அரசு பேருந்துகளில் இலவச பஸ் பயணம் உள்ளிட்ட இலவச திட்டங்கள் அமலில் இருக்கதான் செய்கின்றன.

திமுக, அதிமுகவுக்கு நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று கேட்பது போல, பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள வகை செய்யும் திட்டம் விரைவி்ல் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் அறிவித்திருந்தார்.

போட்டா போட்டி:
இப்படி ஆளாளுக்கு இலவசங்களை அறிவித்து வரும்போது நாங்கள் மட்டும் என்ன சும்மாவா என்பது போல, குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை, விவசாயத்துக்கு இலலச மின்சாரம் உள்ளி்ட்ட இலவச திட்டங்களை அங்கு தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது ஆம் ஆத்மி. காங்கிரஸும் தன் பங்கு்ககு குஜராத் வாக்காளர்களை கவர இலவச வாக்குறுதிகளை அளித்துள்ளது.

வழக்கு:
இப்படி அரசியல் கட்சிகள் ஒன்றையொன்றை விஞ்சும் வகையில் இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துவரும் நிலையில், ‘அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்க கூடாது எனவும், அப்படி வழங்கும் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’ என்றும் கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்று நீதிபதி கருத்து தெரிவித்திருந்தாலும், வழக்கு இன்னும் விசாரணையில்தான் உள்ளது.

பிரதமர் கவலை:
இந்த நிலையில்தான், இலவச திட்டங்கள் அரசுக்கு சுமையாக அமையும் என பொருள்படும்படி பிரதமர் மோடி அண்மையில் ஒரு அரசு விழாவில் கூறியிருந்தார். அவரை தொடர்ந்து, இலவசங்களால் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது என கூற முடியுமா என்று நாம் தமிழர் கட்சியின் சீமானும், தமிழக பாஜக தலைவjd அண்ணாமலையும் திமுக அரசை நோக்கி கேள்வி கணைகளை வீசி உள்ளனர்.

இப்படி இலவசங்கள் குறித்து கவலைப்படும் பிரதமர் மோடி ஆகட்டும்… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகட்டும்…. இவர்கள் யாரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன்கள் என வங்கிகள் ஆண்டுதோறும் தள்ளுபடி செய்து வரும் லட்சம் கோடிக்கணக்கான ரூபாய் குறித்தும், இதன் விளைவாக அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறித்தும், நாட்டின் பொருளாதாரம் சந்தித்துவரும் நெருக்கடி பற்றியும் கவலைப்படுவதாக தெரியவில்லை.

10 லட்சம் கோடி தள்ளுபடி:
கடந்த ஐந்து நிதியாண்டுகளில் மட்டும் சுமார் 10 லட்சம் கோடி ரூபாயை வாராக் கடனாக வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன என்று மத்திய அரசே நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்திருந்தது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 2 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. இந்த கடன்களில் பெருந்தொகை அனேகமாக பெருநிறுவனஙகள் (கார்ப்பரேட்) வாங்கிய கடனாகதான் இருக்கும்.

இந்த 10 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை ஒப்பிடும்போது, சாமானிய மக்களுக்காக மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களுக்கு செலவிடப்படும் தொகை மிகவும் குறைவு. எனவே இலவச திட்டங்கள் குறி்த்து கவலைப்படுபவர்கள் முதலில் பெருநிறுவனங்களிடம் இருந்து வரவேண்டிய வாராக் கடன்கள் குறித்து சிந்தித்தால் நல்லது என்பதே வெகுஜென மக்களி்ன் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.