40 சதவீதம் விலை உயர்வால் சிவகாசியில் பட்டாசு விற்பனை ‘டல்’

சிவகாசி: சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு விலை 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் விற்பனை மந்த நிலையில் உள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 1,100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு உற்பத்திக்கு பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தவும், சரவெடி பட்டாசு தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவகாசியில் பட்டாசு தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது. ஆலைகளில் தற்போது பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டாசு அலுமினிய பவுடர், சிகப்பு உப்பு, வெடி உப்பு, சல்பர் போன்ற மூலப்பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. பட்டாசுக்கு தேவையான அட்டைப்பெட்டி, காகிதங்கள் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 40 சதவீதம் வரை  விலையை உயர்த்தியுள்ளனர்.
சிவகாசியில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன.

 இந்த கடைகளில் ஆடி 18ல் சிறப்பு பூஜை நடத்தி விற்பனை துவக்குவது வழக்கம். இந்த ஆண்டு வழக்கம்போல் சிறப்பு பூஜைகள் செய்து விற்பனையை துவக்கியுள்ளனர். ஆனால் இதுவரை பட்டாசு விலை பட்டியலை வியாபாரிகள் வெளியிடவில்லை. ஒரு சில பட்டாசு கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடை உரிமையாளர்களும் விலை பட்டியலை வெளியிட தயக்கம் காட்டுகின்றனர். சிவகாசியில் 50 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை செய்யப்படும்  என்பதால் மதுரை, சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 40 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் தள்ளுபடி விலை அறிவிப்பதில் வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் விலை பட்டியல் வெளியிடுவதில் காலதாமம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.