டோல்கேட் பெண் ஊழியரை அடித்த நபர்; செருப்பை கழற்றி திருப்பி கொடுத்த பெண்

நாடு முழுவதும் டோல்கேட்டுக்கு எதிராக மக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியுள்ளனர். தமிழகத்திலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக டோல்கேட்டுகளை அகற்றக்கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மகாராஷ்டிராவில் பலமுறை டோல்கேட் நீக்கக்கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் நெடுஞ்சாலைகளில் இருக்கும் அதிக டோல்கேட் மற்றும் கட்டணங்கள். இவற்றை குறைக்கக்கோரியும், நீக்கக்கோரியும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் மத்திய அரசு டோல்கேட் கட்டணங்களை வசூலிப்பதில் மட்டுமே புதிய புதிய யுக்திகளை புகுத்தி வருகிறது.

இதனால் கடுப்பாகும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வப்போது டோல்கேட் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. இப்படியான சூழலில் மத்திய பிரதேசத்தில் டோல்கேட்டில் பெண் ஊழியரை, நபர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. அந்த வீடியோவில் டோல்கேட் பெண் ஊழியரிடம் வேகமாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபடும் திடீரென பெண்ணை தாக்குகிறார். எதிர்பார்க்காத பெண், தானும் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அவரை திருப்பித் தாக்குகிறார்.

காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி தன்னை அடித்த நபரை தாக்குகிறார். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. பலரும் பெண்ணை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இன்னும் சிலர், அங்கு நடந்த சம்பவத்தை முறையாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளனர். டோல்கேட் பெண் ஊழியரை ஆண் ஒருவர் தாக்கும் இந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.