உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை – சென்னையில் சோகம்

சென்னை அயனாவரம் நாட்டு முத்தையால் கன் தெருவை சேர்ந்தவர் கலா. இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக  தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகனும், விஜய் என்ற மகனும் உள்ளனர். விஜய் பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு தனது வீட்டின் அருகே உள்ள தனியார் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் வாட்டர் வாஷ் செய்யும் வேலை செய்துவந்தார். இந்தச் சூழலில் நேற்று காலை 9 மணிக்கு கலா வியாசர்பாடியில் உள்ள சர்ச்சுக்கு சென்றுவிட்டு மதியம் ஒரு மணிக்கு வந்தார். அப்போது வீட்டின்கதவு உள் பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது. எவ்வளவு நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த கலா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார் கலா.

அப்போது, வீட்டில் இருந்த ஹாலில் உள்ள மின்விசிறியில் சேலையால் விஜய் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தபோது மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு விஜய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அயனாவரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற அயனாவரம் போலீசார் விஜய்யின் உடலை மீட்டு அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விஜயின் உறவினர்கள் வீட்டை சோதனை செய்தபோது அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்தது அதில் விஜய் வேலை செய்த இடத்தில் அவர் ஒரு பொருளை எடுத்துவிட்டதாகவும் அதனை அந்த ஷோரூமில் வேலை செய்யும் மேனேஜர் சுனில் என்பவர் கண்டுபிடித்து அனைவரும் முன்னிலையில் முட்டி போட வைத்து அடித்ததாக எழுதியுள்ளார். அதனால் எனது சாவிற்கு மேனேஜர் சுனில்தான் காரணம். அம்மா உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன் என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.