பிரிட்டன் ராணி இறுதிச்சடங்கு: லண்டன் வந்தார் அமெரிக்க அதிபர் பைடன்!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் லண்டன் வந்துள்ளார்.

பிரிட்டன் நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் பிரிட்டனுக்கு படையெடுத்து உள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டு உள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, நாளை ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு..!- அரச குடும்பத்தில் நிறவெறி சர்ச்சை..!

இந்நிலையில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் லண்டன் சென்றடைந்தார். அவரது விமானம் நேற்று இரவு 10:00 மணியளவில் லண்டன் அருகே உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தை சென்றடைந்தது.

இன்று, ராணி எலிசபெத்தின் உடலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மரியாதை செலுத்துவார் என்றும் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் உடனான ஜோ பைடனின் திட்டமிடப்பட்ட சந்திப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக, இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் நகருக்கு வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.