ராணி எலிசபெத் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு: லண்டனில் குவிந்த உலகத் தலைவர்கள்!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (96) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ஆம் தேதி காலமானார். ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் அவர் உயிர் பிரிந்ததாக, பக்கிங்ஹம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராணி எலிசபெத் மறைவையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக முடிசூடிக் கொண்டுள்ளார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்தால் அடுத்த நடக்க வேண்டிய திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும். அதன்படி, பால்மாரல் அரண்மனையில் இருந்து பக்கிங்ஹம் அரண்மனைக்கு ராணி எலிசபெத்தின் உடல் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, எடின்பர்கில் செயின்ட் கில்ஸ் கதீட்ரலில் ராணியின் உடல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு ராணியின் உடல் கொண்டு வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணி இரண்டால் எலிசபெத் உடலுக்கு பொதுமக்கள், பிரபலங்கள், உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக, உலக நாடுகளின் தலைவர்கள் உட்பட 10 லட்சத்திற்கும் அதிகமானோர் லண்டனில் குவிந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பிரிட்டன் அரசு அழைப்பு விடுத்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள் ராணியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களும் மரபுப்படி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம், ஹாரி ஆகியோர் ராணுவ உடை அணிந்து அஞ்சலி செலுத்தினர்.

இங்கிலாந்தில் திரவுபதி முர்மு..! – ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி..!

ராணியின் உடலுக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இறுதி சடங்குகள் நடத்தப்படுகின்றன. இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு ராணியின் இறுதி சடங்குகள் தொடங்குகின்றன. தற்போது ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். ஊர்வலத்திற்கு ராணியின் தந்தை இறப்பின்போது பயன்படுத்தப்பட்ட சாரட் வண்டி பயன்படுத்தப்படுகிறது. பக்கிங்ஹம் அரண்மனையில் அரச குடும்பத்தினர் இணைந்து கொள்வர்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இறுதி சடங்குகள் நடத்தப்படுகின்றன. இதையடுத்து, அருகில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு முழு அரச மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு முடிந்தவுடன் பிரிட்டனில் ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.