'ஓசி, வேசி வார்த்தைகள் டேக்கிட் ஈஸியா?' – ஏ.ஜி.சம்பத் ஆவேசம்!

விழுப்புரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்போம் என்றார். ஆனால், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபமும், இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மணிமண்டபமும் எங்கே என்றார். அதற்காக என்ன செய்தார் என்று கூட தெரியவில்லை .

இடம் பார்ப்பதாக சொல்லி 20 கார்களுடன் சென்று அமைச்சர் பொன்முடி விளம்பரப்படுத்திக்கொண்டார். இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கான காரணம் அரசியலாகக்கூட இருக்கலாம். நிச்சயம் அதை நிறைவேற்றுவோர் என்று நம்புகிறோம்.

எம்பி இந்துக்கள் என்றால் வேசி என்கிறார், பஸ்சில் சென்றால் அமைச்சர் ஓசி என்கிறார். இப்படி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டால் டேக்கிட் டீசி என்கிறார்கள். மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். திமுகவில் இருந்த மூத்த தலைவர்கள் என்றைக்காவது இதுபோன்று பேசியது உண்டா? இதுபோன்று அவதூறான வார்த்தைகளை உச்சரிக்கக்கூடாது என்று ஸ்டாலின், தனது சகாக்களுக்கு கட்டளையிட வேண்டும்.

ஸ்டாலின் கண்டிக்கத் தவறினால் மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள், அது தேர்தலாக இருக்கலாம், அல்லது போராட்டமாகவும் இருக்கலாம். ஆர்எஸ்எஸ். இயக்கத்தின் தன்மையை புரிந்துக்கொள்ளாதவர்கள் ஏதேதோ பேசுகிறார்கள். அந்த இயக்கம் பிரிட்டிஷ் சர்க்காரை எதிர்க்க உருவாக்கப்பட்ட இயக்கம். சுதந்திரத்திற்கு முன்பு எதைச்சொன்னார்களோ அதைத்தான் இன்றும் சொல்கிறார்கள். அது தேசிய இயக்கம், புனிதமான இயக்கம். இதையெல்லாம் ஸ்டாலின் புரிந்துகொள்வார் என்று நம்புகிறோம்.

எதிர்காலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்க நிகழ்ச்சியை ஸ்டாலினே தொடங்கி வைப்பார். விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவில் அவரது மகன் என்ற முறையில் நான் கலந்துகொள்வேன்” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.