பணமோசடி வழக்கில் ஆஜராக கர்நாடக காங். தலைவருக்கு சம்மன்: ராகுல் பேரணியில் பங்கேற்ற நிலையில் பரபரப்பு

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் சிக்கிய கர்நாடகா காங்கிரஸ் தலைவரை வரும் 7ம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடர்பான பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 7ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் 19ம் தேதி மற்றொரு பணமோசடி வழக்கு தொடர்பாக, டி.கே.சிவக்குமார் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான கட்சியினர் கடந்த செப்டம்பர் 30ம் தேதி முதல் கர்நாடகாவில் பேரணி நடத்தி வருகின்றனர். இந்த பேரணியில் டி.கே.சிவகுமாரும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு எதிராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.