கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த விமலா என்ற பெண், இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்திருக்கிறார். அந்தப் பெண் வளாகத்திலுள்ள நான்காவது நுழைவுவாயில் அருகே தன் குடும்பத்தாருடன் நின்றுகொண்டிருந்தார்.
திடீரென அந்தப் பெண் தான் குடிநீர் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து ஊற்றிக்கொண்டு தீ குளிக்க முயற்சி செய்தார். இதனைப் பார்த்த அங்குப் பாதுகாப்புப்பணியிலிருந்த காவலர்கள் உடனடியாக அந்தப் பெண்மீது தண்ணீரை ஊற்றினர்.
தொடர்ந்து அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், “கும்பகோணம் மாநகராட்சியில் நாங்கள் வசித்துவந்த நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துக்கொண்டது. நிலத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தொடங்கி, பல பேரிடமும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் இந்த முடிவு” எனக் கூறியிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலக வளாகத்தில் பெண் ஒருவர் தீ குளிக்க முயற்சி செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.