ஸ்பெயின் நாட்டினுடைய பத்திரிகை La Vanguardia. இதில், கடந்த 9-ம் தேதி இந்தியப் பொருளாதாரம் பற்றிக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்ற சித்திரிப்பு படம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மகுடி ஊதும் ஒரு பாம்பாட்டியின் சித்திரிப்பு படத்தை வைத்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பிட்டிருப்பது இந்தியக் கலாச்சாரத்தைக் கேலி செய்யும் விதமாக உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாகப் பேசிய பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், “இந்தியாவின் வலிமையான பொருளாதாரம் உலக அங்கீகாரத்தைப் பெற்றாலும், சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் நம்மைப் பாம்பாட்டிகளாகச் சித்திரிப்பது சுத்த முட்டாள்தனம். வெளிநாட்டவரின் காலனித்துவ மனப்பான்மையை மாற்றுவது கடினமான செயல்” என்று பதிவிட்டுள்ளார்.
இது சமூகவலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து இந்தியக் கலாச்சாரம் குறித்து மேலை நாடுகள் இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலை நாட்டினர் நம்மை எப்படிச் சித்திரித்தாலும், நம் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்று சிலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.