இந்திய பெண்கள் சாம்பியன் : ஆசிய கோப்பை கிரிக்கெட்டில்| Dinamalar

சில்ஹெட்: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி 7வது முறையாக கோப்பை வென்றது. பைனலில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. அபாரமாக ஆடிய மந்தனா அரைசதம் விளாசினார்.

வங்கதேசத்தில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (‘டி-20’) 8வது சீசன் நடந்தது. சில்ஹெட் நகரில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணி, துவக்கத்தில் இருந்தே தடுமாறியது. கேப்டன் சமாரி (6), அனுஷ்கா சஞ்சீவனி (2) ‘ரன்-அவுட்’ ஆகினர். ரேணுகா சிங் ‘வேகத்தில்’ ஹர்ஷிதா (1), ஹாசினி (0), கவிஷா (1) வெளியேறினர். ராஜேஷ்வரி கெய்க்வாட் ‘சுழலில்’ நிலாக் ஷி (6), ஒஷாதி (13) போல்டாகினர். ஸ்னே ராணா பந்தில் மால்ஷா ஷெஹானி (0), சுகந்திகா குமாரி (6) ஆட்டமிழந்தனர். பின் இணைந்த இனோகா, அச்சினி ஜோடி நிதானமாக விளையாடியது. ஷபாலி வர்மா வீசிய கடைசி ஓவரில் இனோகா, 2 பவுண்டரி அடித்தார். இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 65 ரன் எடுத்தது. இனோகா (18), அச்சினி (6) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ரேணுகா 3, ராஜேஷ்வரி, ஸ்னே ராணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (5), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (2) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய ஸ்மிருதி மந்தனா, சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். ஒஷாதி வீசிய 3வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த மந்தனா, கவிஷா வீசிய 7 வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். ஒஷாதி வீசிய 9வது ஓவரின் 3வது பந்தை சிக்சருக்கு அனுப்பிய மந்தனா, அரைசதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 8.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 71 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மந்தனா (51), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.